February 26, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளித்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நடைபெறாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேரடியாக மீண்டும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
சூலூர் வட்டம் செம்மாண்டம் பாளையம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில், அருகில் உள்ள நீர் ஓடை பகுதியில் இருந்து பெருமளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர் வகைகள் அனைத்தும் கடித்து நாசமாக்கி விடுகின்றன. இதுகுறித்து வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நிலம் வாங்கி வீடு கட்ட போர்வெல் அமைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் நீர் பாதுகாப்பு தன்மையும் பாதிக்கப்படுகிறது. கோடை காலத்தை பயன்படுத்தி போர் அமைப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.