February 2, 2021
தண்டோரா குழு
யானைகள் நலவாழ்வு முகாமிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் ராஜாமணி பேசியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்கள், மடங்களின் யானைகள் நலவாழ்வு முகாம் கோவை, தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் அருகிலுள்ள பவானி ஆற்றுப்படுகையில் நடைபெறவுள்ளது. முகாம் வளாகத்தின் உள்பகுதி, வெளிப் பகுதிகளில் வனவிலங்குகளால் இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் வேட்டைத்தடுப்பு காவலர்களை பணியமர்த்த வேண்டும்.யானைகளின் நலன், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் வழங்குதல், ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்துகள், தற்காலிக முகாம் அமைத்தல், அவசர சிகிச்சைக்கான வசதிகளை கால்நடை பராமரிப்புத் துறை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேர அவசர சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்களுடன் முகாம் வளாகத்தில் 104 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். முகாமிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முகாமிற்கு தேவையான குடிநீர் வழங்கவும், தினமும் சேறும் கழிவுகளை உடனடியாக அகற்ற உள்ளாட்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை பராமரிக்க ஒவ்வொரு யானைக்கும் பாகன், உதவியாளர் என இரண்டு நபர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அவசர சிகிச்சைக்காகவும் வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
யானை பாகன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும். யானைகள் குளிக்க ஏதுவாக சகதி நீக்கப்பட்டு நல்லநீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். சாலைகள் மேடு, பள்ளம் இல்லாமல் சமதளமாகவும், வலுவானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முகாமிற்கு தேவையான பால், இதர பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். யானைகள் நலவாழ்வு முகாம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் உள்பட பலர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.