January 6, 2021
தண்டோரா குழு
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் அதிமுக முக்கிய பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து, இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ் ஆகிய 3வரை 2019 மார்ச் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர்.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு 2019 மார்ச் 11ம் தேதி பிடிபட்டார்.
மேலும், மணிவண்ணன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை குறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பின் சி.பி.ஐ,க்கு மாற்றம் செய்யப்பட்டு, 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சிபிஐ இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில், திருப்பு முனையாக தற்போது, மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்
படுத்தினர்.
இந்த வழக்கில் கைதான சபரிராஜன், சதீஸ், திருநாவுக்கரசு,வசந்த்,மணிவண்ணன், ஆகியோர் சேலம் மத்திய சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.