December 29, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் ரூ.2000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை, 43 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்திற்கு 70 அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகரப்பகுதி மற்றும் ஊரகப்பகுதிகளில் மினிகிளினிக்குகள் துவங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மினி கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் உடனுக்குடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்த மருந்துகள், காய்ச்சல், சளி போன்றவற்றிற்கான மருந்துகள் போன்றவை மினி கிளினிக்கிலேயே வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.