December 29, 2020
தண்டோரா குழு
ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள சூழலில், இது தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், இனிமேல் அவருக்காக கீ செயின்,போஸ்டர்கள் ஒட்டப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக அரசியல் பிரவேசம் குறித்து இழுத்தடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சத்தியமூர்த்தி கூறுகையில்,
ரஜினிக்காக குடும்பத்தை, குழந்தைகளை பார்க்காமல் கடுமையாக உழைத்தோம். தலைவரின் இலக்கை அடைய கடுமையாக உழைத்தோம். எத்தனை ஆண்டுகள் வாழப்போறோம்? முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? எதற்கு நடிக்கிறீர்கள்? அவர் ரசிகர்களுக்காக எதுவும் செய்யப்போவது இல்லை. இனி லட்சக்கணக்கில் செலவு செய்து ரசிகர் காட்சிகளை எடுக்க மாட்டோம். இனி கீ செயின் போஸ்டர் செய்யப்போவதில்லை. எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். இன்று கருப்பு நாள். எங்களை ஏமாற்றியது உங்கள் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருக்கும் என்றார்.