December 14, 2020
தண்டோரா குழு
பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவரை சாதிய ரீதியாக மிரட்டி பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிமுக துணைத்தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் 700 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த ஊராட்சி தேர்தலில் இப்பகுதி பழங்குடியின வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்டு சுந்தரி தங்கவேலு என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரியையும், அவரது கணவர் மற்றும் மகனையும் ஆதிக்க சாதியை சார்ந்த துணைத்தலைவர் கிருஷ்ணன் மிரட்டுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து சுந்தரி தங்கவேலு பேசும்போது,
சாதிய ரீதியாக துணைத்தலைவர் கிருஷ்ணன் செயல்படுவதாகவும், எந்த பணி செய்தாலும் தன்னிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் அவருடன் சேர்ந்து இரு உறுப்பினர்கள் ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்தார்.
அதிமுகவைச்சேர்ந்த துணைத்தலைவர் கிருஷ்ணன் அவருடைய நிர்வாகத்தின் கீழ்தான் ஊராட்சி மன்றம் செயல்பட வேண்டுமெனவும், உயர் சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் சொல்வதை கேட்டுத்தான் நடக்க வேண்டும் என மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவராக சுதந்திரமாக செயல்பட பெண் துணைத்தலைவரை நியமிக்கக்கோரியும், துணைத்தலைவர் கிருஷ்ணன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.