December 12, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 24 மணிநேர குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்புரம் திருவேங்கடசாமி சாலை, சர்சீவிராமன் சாலை, மேற்கு சம்மந்தம் சாலை, குருகோவிந்த் சிங் ரோடு, தடாகம் ரோடு ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை ஆய்;வு மேற்கொண்ட ஆணையாளர் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக சாலைகளில் குழாய்கள் பதித்த பின்பு கசிவு ஏற்படாமல் உள்ளதை உறுதி செய்த பின்பு, 24 மணிநேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்து சீரமைக்க வேண்டும். இந்தப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய பொறியாளர்களுக்கும், சூயஸ் நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார்.
அதற்கு முன்னதாக மேற்கு மண்டலம் கே.கே.புதூர் மற்றும் வார்டு எண்.22 சாய்பாபா காலனி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் குப்பைகள் தேங்கா வண்ணம் தூய்மைப்பணியாளர்கள் கால்வாய்களில் அடைக்கப்பட்ட குப்பைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதை ஆய்வு மேற்கொண்ட, ஆணையாளர், பொதுமக்களிடம் குப்பைகளை கால்வாய்கள், சாலை ஓரங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கி, தங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர், வார்டு எண்.22 பாரதி பூங்கா, 5வது கிராஸ் பகுதியில் தூய்மைப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை வாகனங்கள் மூலம் ஏற்றிச்செல்லும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் , அப்பகுதி பொதுமக்களிடம் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்டி சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் (24ஓ7 குடிநீர் திட்டம்) .பார்வதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவிப்பொறியாளர் சத்தியமூர்த்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.