September 23, 2020
தண்டோரா குழு
மருதமலை அடிவாரத்தில் புதிதாக ரூ.5 கோடி மதிப்பில் அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.
கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று ரூ.2.2 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணி திட்டங்களை துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மருதமலை அடிவாரப்பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மருதமலை அடிவாரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில்,ரூ.5 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில், நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கும்,கணுவாய்-தடாகம் சாலையில் ரூ.3 கோடி மதிப்பில் வடிகால் மற்றும் புதிய தார் சாலை அமைக்கவும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சோமயம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலை அடிவாரப் பகுதியில் ரூபாய் 4 கோடியே 9 லட்சம் மதிப்பில் 1.60 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பேருந்து நிலையம் அமைய உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் தலா 7 ஆயிரத்து 357 சதுர அடி பரப்பளவில் இரண்டு அடுக்கு வணிக வளாகங்கள், 12 பேருந்துகள் ஒரே நிறுத்திக் நேரத்தில் நிறுத்திக் கொள்ளும் வகையிலான பேருந்து நிறுத்துமிடம். தாய்ப் பாலூட்டும் அறை. ஓட்டுநர் நடத்துநர் ஓய்வு அறை, புறக்காவல் நிலையம், மாற்றுத்திறனாளிகள் சாய்வு எறுதளம், கழிப்பறை வசதிகள், பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.