September 8, 2020
தண்டோரா குழு
கோவை செட்டி வீதி பகுதியில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 12 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கினார்.
கோவை செட்டி வீதி பகுதியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். வனஜா என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில், ஸ்வேதா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் இந்த வீடு பக்கத்து ஓட்டு வீட்டின் மீது விழுந்து சேதமடைந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கோபால்சாமி, கஸ்தூரியம்மாள், மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை சந்தித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி ஒரு இலட்ச ரூபாய் மற்றும் பேரிடர் நிவாரண நிதி 3 இலட்ச ரூபாய் என 4 இலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். உயிரிழந்த 3 பேருக்கு மொத்தம் 12 இலட்ச ரூபாய்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.இதில் உயிரிழந்த மணிகண்டன் வாரிசுதாரார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட பின்னர் தொகை அளிக்கபட உள்ளது.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி,மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், துனை ஆணையர் மதுராந்தகி,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.நிவாரண உதவி வழஙகிவிட்டு அமைச்சர் செல்கையில் அங்கிருந்த அப்துல் லத்தீப் என்ற வாலிபர் அமைச்சரிடம் எதோ சொல்ல யார் இவர் என கேள்வி எழுப்பியபடி அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார். போலீசார் அந்த நபரை மீட்டு விசாரணை செய்தபோது வீடு இடிந்தபோது இடிபாடுகளை அகற்றும் ஜே.சி.பி இயந்திரம் இயக்கியவரின் நண்பர் எனவும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவியதும் தெரியவந்தது.வேலை செய்த பணம் கேட்டதாகவும் கொடுக்காத காரணத்தால் அமைச்சரிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.
கட்சியினர் ஒன்று கூடியதால் அப்துல் லத்தீப்பை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.இதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் ஆறுதல் கூறியவர் காயமடைந்த 3 பேருக்கு தலா ஒன்றரை இலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்.