June 1, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் மூடப்பட்ட பேருந்து நிலையங்கள், வண்ணங்கள் பூசப்பட்டு புதிய பொலியுடன் செயல்பட துவங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.இதனால் கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டது.தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து மூடப்பட்ட காந்திபுரம், உக்கடம், உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்து நிலையங்களும் வண்ண பெய்ண்டுகள் பூசப்பட்டது.மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும் சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளை காய்ச்சல் பறிசோதனை செய்யும் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.