May 31, 2020
தண்டோரா குழு
சூலூரில் திருடு போன பைக் கொரியரில் வந்த சம்பவம் உரிமையாளருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
சூலூர் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(34).இவர் அதே பகுதியில் லூத் ஒர்க்சாப் வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 15 தினங்களுக்கு முன் சுரேஷ் தனது பைக்கை கம்பெனி முன்பு நிறுத்தியிருந்தார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது பைக் காணாமல் போயிருந்தது.அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றுவிட்டதாக நினைத்தார்.பைக் காணாமல்போன இடத்தின் அருகிலிருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றது அதில் பதிவாகி இருந்தது.மர்ம நபர் குறித்து விசாரிக்கையில் அந்த நபர் அப்பகுதியில் பணியாற்றும் டீ மாஸ்டர் என தெரியவந்தது.ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவல்களும் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று சூலூர் கொரியர் அலுவலகத்தில் இருந்து சுரேஷ் குமாருக்கு கூரியர் வந்துள்ளதாக கூறி அழைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து சுரேஷ் சென்று பார்த்தபோது திருடுபோன பைக் கொரியரில் வந்தது தெரியவந்தது.இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த சுரேஷ் உரிய கட்டணத்தைச் செலுத்தி தனது பைக்கை எடுத்து வந்தார்.திருடு போன வாகனம் கொரியரில் வந்த அதிசயம் சுரேஷிற்கு அதிசயத்தையும்,ஆச்சரியத்தையும் தந்துள்ளது.