May 19, 2020
தண்டோரா குழு
எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரமாக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டு மணி நேர வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது முக கவசம் அணிந்தபடி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும்,எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது எனவும், வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திய தொழிற்சங்கத்தினர், வருகின்ற 22 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.