May 17, 2020
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட் ” திடீர் ” வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இளைஞர்களை பரிசல் மூலமாக தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட மேல்துறை வழியாக செல்லும் பவானி ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த 23 இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது,பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு பின்னர் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதை கண்ட இளைஞர்கள் ஆற்றின் நடுவே இருந்த படித்துறையில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
பின்னர்,தங்களது செல்போன் மூலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய இளைஞர்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பரிசல் மூலமாக பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.