May 12, 2020
தண்டோரா குழு
சர்வதேச செவிலியர் தினத்தில் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி,எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து நூதன முறையில் போராட்டம் செய்து வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு, மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் சுமார் 10,000 செவிலியர்களை போட்டித் தேர்வின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 7700 க்கு பணி அமர்த்தியது. 2 ஆண்டு கால பணி முடிந்ததும் அவர்கள் காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்டு பணி நிரந்தரம் செய்வதாக அரசு உறுதியளித்து உத்தரவிட்டது. ஆனால் 5 வருடங்கள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த முறையிலே வைத்துள்ளது.
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக செவிலியர் பணியை ஒப்பந்த செவிலியர்கள் செய்துகொண்டு வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதை பரிசீலிக்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது.ஆனால்
நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சம வேலை செய்யும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காமல் வெறும் ரூபாய் 14000 மட்டுமே தொகுப்பு ஊதியமாக வழங்கி வந்தது.
மேலும் பணியில் சேர்ந்து 5 வருடங்கள் முடிந்தும் இந்த அரசு எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை.இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணியிலும் இந்த செவிலியர்கள் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணி செய்தும் ஊதியத்தில் பாரபட்சம் காட்டும் இந்த அரசு காலமுறை ஊதியம் வழங்க கோரியும்,பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் எம்.ஆர்.பி ஒப்பந்தத் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.