April 29, 2020
தண்டோரா குழு
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் நாளை (ஏப்.,30) மட்டும், காலை 6 மணி முதல் 5 மணிவரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் பொது மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிடுகின்றனர். இதற்கிடையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதால், சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நிபந்தனைகளுடன் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் நாளை (ஏப்.,30) மட்டும், காலை 6 மணி முதல் 5 மணிவரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள
அறிக்கையில்,
முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில் நாளை முதல் வழக்கம் முன்பு இருந்த நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை,மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் நாளை (30.04.2020) ஒரு நாள் மட்டும்,அத்தியாவசிய பொருட்களான காய்கறி,மளிகை,பழங்கள் ஆகிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
நாளை மறுநாள் (01.05.2020) முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கும் நடைமுறை பின்பற்றப்படும். கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவும் என்பதால்,பொதுமக்கள் அத்யாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாகவும்,பொறுமை காத்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.மேலும், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எந்தவித மாற்றமுமின்றி மே 3 வரை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.