April 20, 2020
தண்டோரா குழு
புலம்பெயர்த்த தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாராணம் வழங்கக்கோரி பட்டினி போராட்டம் நடத்திய CPI ML கட்சியின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
CPIML கட்சியின் சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பட்டினி போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக தடாகம் சாலை முத்தண்ணன் குளம் அருகே வீடுகள் நிறைந்துள்ள பகுதியில் CPI ML கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பட்டினி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் அக்கட்சியின் மாநகர செயலாளர் வேல்முருகன், AICCTU அமைப்பின் மாநில செயலாளர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கொரொனா பாதிப்பு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும், உணவிற்கு சிரமப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இந்நிலையில் ஊரடங்கு உத்திரவு அமுலில் இருக்குபோது ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் வேல்முருகன் மற்றும் லூயிஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசுக்கு எதிராக வதந்தியை பரப்புதல், ஊரடங்கு உத்திரவை மீறுதல், அரசு ஊழியரின் உத்திரவுக்கு கீழ் படியாமை, தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். AICCTU மாநில செயலாளர் லூயிஸ் மட்டும் காவல் நிலைய பிணையில் விட்ட காவல் துறையினர் CPI ML மாநகர செயலாளர் வேல்முருகனை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.