April 12, 2020
தண்டோரா குழு
கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகை நாளான இன்று 144தடை உத்தரவு அமலில் உள்ளதால் தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் முகநூல் வாயிலாக நேரலை ஆராதனை நடைபெற்றது.
கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் உலக முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 1மாதத்திற்கு மேலாக விரதம் இருந்து ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர். தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் கோவையில் உள்ள பல தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் தலைவர் பர்னபாஸ் உதவி ஆயர் நெல்சன் சதீஷ்குமார் தலைமையில்ஆட்கள் இல்லாமல் மொபைல் வாயிலாக முகநூல் நேரலை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சபையை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் தங்களது முகநூல் வாயிலாக இந்த ஆராதனையில் கலந்து கொண்டனர். கடந்த நூறு ஆண்டுகளில் இந்த மாதிரி ஆராதனை நடைபெற்றது இதுவே முதன் முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.