March 28, 2020
தண்டோரா குழு
கோவை மக்கள் மற்றும் காவல்துறையினர் ஊரடங்கினையும், சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றிவருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். முதல்வரின் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து கோவை மாநகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுவருகிறது.
அதேபோல சமூக கூடலை கட்டுப்படுத்த போலீசாரும் பாதுகாப்பு வளையங்களை அமைத்து அநாவசிய பயணங்களை தடுத்து வருகின்றனர். மேலும் சந்தை, மளிகை கடை, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என கண்காணித்து வருகின்றனர்.இது தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் கோவை மக்களுக்கும், காவல்துறைக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது காவல்துறையின் இடைவிடா பணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் உத்வேகத்தைக் கொடுக்கிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த உத்வேகத்தைக் கொடுத்த முதல்வருக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கோவை மாநகர போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, ராமநாதபுரம், ஒலம்பஸ், புலியகுளம், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கைகளை கழுவி முகக் கவசங்கள் அணிந்து தொடர்ந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.