December 5, 2019 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அரசிற்கு அறிவுறித்தியுள்ளோம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துனை தலைவர் முருகன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணை தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று (வியாழன்) காலை 10 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகின்றனர். பின்னர், காரில் மேட்டுப்பாளையம் சென்றனர்.அங்கு உயிரிழப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார் பின்னர் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் ஆகியோர் உடன் இருந்தார்.
பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துனை தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்னும் இருக்கிற மீதம் உள்ள சுற்று சுவரை இடிக்க சொல்லியுள்ளோம். அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்கள், மீதம் ரூ.6 லட்சம் உடனே கொடுக்க சொல்லியுள்ளோம். அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும். சுற்று சுவரின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சுற்று சுவர் உரிமையாளர் வண்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டதிற்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துனை தலைவர் முருகன் கூறுகையில், ” அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பின் இதுகுறித்து தெரிவிப்போம்,” என்றார்.