November 30, 2019
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 14 நாட்களுக்கு பின்பு இன்று தொடங்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனஸ்கோவால் அங்கீகரிக்கபட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும் குகைகளில் புகுந்து செல்லும் மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம்,கல்லார் மற்றும் நீலகிரி பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லார், ஆடர்லி,ஹில்கிரோ போன்ற மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆடர்லி ஹில்கிரோ ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்து தண்டவாளம் சேதமானது. இதனால் கடந்த 14 நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
தொடர் மழை காரணமாக சேதமடைந்து இருந்த மலை ரயில் பாதை சீரமைப்பு பணி நிறைவுற்றதை தொடர்ந்து இன்று காலை 7.15 மணிக்கு 150 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.