November 29, 2019
தண்டோரா குழு
இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று (நவ.,28) டில்லி வந்தார். அவரை,
வெளியுறவு இணை அமைச்சர் விகே சிங் வரவேற்றார்.இன்று, ஜனாதிபதி மாளிகையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.
இதன்பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,
லங்கை அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசு, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில், இந்தியா இலங்கை உறவுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என கூறினார்.