November 28, 2019
தண்டோரா குழு
மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019 என்ற அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து தமிழ்ச் செய்தி என்ற இணைய வடிவத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் இந்த செய்தியில் “ஷாக் அடிக்குது சோனா….நடந்து போனா… அம்பலமாகும் அமைச்சரின் அந்தப்புரம் அந்தரங்கம் அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர்” என பல அவதூறான வார்த்தைகள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, தமிழ் செய்தி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரிலும், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரிலும் கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இப்புகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக சபீர் கான், ராஷ்யா அப்துல் வகாப், தளபதி படேல் மற்றும் ரகுபதி ரவி ஆகிய 4 பேர் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் சோனாலி பிரதீப் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.