November 27, 2019
கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு போட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள நல்லாம்பாளையம் வ உ சி நகர் பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு 13 வயதில் திவ்யதர்ஷினி மற்றும் பதினோரு வயதில் பிரனேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் மாற்றுத்திறனாளி. குழந்தைகள் இருவருக்கும் வாய் பேச முடியாது. இரு குழந்தைகளும் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அரசு சிறப்பு பள்ளியில் திவ்யதர்ஷினி ஐந்தாம் வகுப்பு பிரனேஷ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களது தந்தை சிவகுமார் கூலி வேலை செய்து வருகிறார். ஆனால் தினமும் குடித்துவிட்டு வருவார். இதனால் தினமும் வீட்டில் சண்டை நடக்கும். இதனால் கௌரி பல நாட்களாகவே சோகத்துடன் இருந்து வந்துள்ளார்.
மேலும் இவர்கள் கௌரியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கௌரியின் தாயார் பேபியை கவனித்து வந்துள்ளார். இன்று பேபி தனது உறவினர் பெண் திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க வெளியே சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. இந்த நிலையில் இன்று மாலை பள்ளியிலிருந்து தனது மகன் மற்றும் மகளை அழைத்து வந்த கௌரி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவை உள்ளே பூட்டி விட்டு இரு குழந்தைகளுக்கும் தூக்கு மாட்டி கொன்று விட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 6 மணியளவில் வீட்டிற்கு வந்த பேபி வீட்டின் கதவைத் தட்டி உள்ளார். ஆனால் திறக்கவில்லை உடனே அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.