November 26, 2019
தண்டோரா குழு
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றபோது, அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் – அஜித் பவார் இணைந்து ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக இருதரப்பும் வாதிட்டனர். ஆனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மூன்று கட்சிகளும் ஒன்றாக கோரிக்கை விடுத்தன. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வீடியோ பதிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில், தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவர்கள் அஜித் பவாருக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை அடுத்து, திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 105 இடங்கள் மட்டுமே உள்ளது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அஜித் பவார் இழுத்து வருவார் என்ற பாஜகவின் கணக்கு பொய்த்தது.
இந்த நிலையில், போதிய பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் என்னால் முதலமைச்சராக நீடிக்க முடியாது. ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளேன். தேசியவாத காங்., சட்டமன்ற குழு தலைவர் அஜித் பவார் ஆதரவு தந்த காரணத்தினால் ஆட்சி அமைத்தேன். அஜித் பவார் ஆதரவை தொடர முடியாது என்று கூறிவிட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன். எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களுடன் எதையும் பேச முன்வரவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.