November 25, 2019
தண்டோரா குழு
கோவை கரும்புக்கடை சாரமேடு ஜீவன்ஸ் சர்வதேச பள்ளியில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் காவலர்,ஓட்டுனர்கள் மற்றும் ஆயாக்களுக்கு மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிள் நடத்திய பாராட்டு விழா அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
பொதுவாக பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களுக்கு என பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.ஆனால்,மனித நேயம் பள்ளி பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு வளர வேண்டும் எனும் நோக்கத்தில், அது குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக கோவை கரும்புகடை சாரமேடு பகுதியில் உள்ள ஜீவன்ஸ் சர்வதேச பள்ளியில் சமுதாய தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் நிர்வாகிகள் டாக்டர் அப்துல் அஜீஸ் ,முகம்மது தமீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் பள்ளியில் பணி புரியும் காவலர்கள், ஓட்டுனர்கள்,மற்றும் ஆயாக்கள் என பல்வேறு நிலைகளில் பணி புரியும் தொழிலாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் முன்னதாக பள்ளியின் காவலர் தேசிய கொடி ஏற்ற பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் சல்யூட் அடித்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பணபுரியும் அனைவருக்கும் சால்வைகள் அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழாவில் பள்ளி குழந்தைகள் சமூகத்தில் அன்றாடம் சமுதாய பணி செய்து வரும், காவலர், செவிலியர், மருத்துவர், பொறியாளர், செய்தியாளர் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் வேடமணிந்து அது போல நடித்தும் காண்பித்தனர்.
நிகழ்ச்சி குறித்து ஜீவன்ஸ் பள்ளியின் செயலாளர் சிவக்குமார் பேசுகையில்,
சமூதாயம் முன்னேற மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட, சமுதாயத்தில் பணியாற்றும் பல்வேறு நிலை பணியாளர்களின் சிரமங்களை புரிந்து கொள்ளும் விதமாக எங்களது பள்ளியில் இது போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார். இந்த விழாவை முன்னிட்டு பள்ளியில் பணி புரியும் ஓட்டுனர்,காவலர் மற்றும் ஆயாக்களை அமர வைத்து மாணவ,மாணவிகளே அவர்களுக்கு மதிய விருந்து பரிமாறி அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களது பணிகளின் சிரமங்கள் குறித்து கேட்டறிந்தனர்.