November 25, 2019
திருப்பூரில் சொத்தை ஏமாற்றி எழுதிக் கொண்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர், பெரிச்சிபாளையம் பி கே ஆர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து , இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 4 மகன்கள். இதில் இரண்டாவது மகன் மணியின் மகன் செல்வராஜ் கடந்த 2010ஆம் ஆண்டு சரஸ்வதி பெயரில் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள 2 3/4 சென்ட் சொத்தை உயில் எழுதி வைக்கும்படியும் முதியவர்களை நன்கு பார்த்து கொள்வேன் என்றும் கூறினார் .அவர் சொன்னதின் பேரில் முதியவர்கள் உயில் எழுதிக்கொடுக்க சம்மதித்தனர். ஆனால் சொத்தை செல்வராஜ் பேரில் மாற்றி எழுதிக் கொடுத்த பின்னர், முதியவர்களை கவனிக்காமல் கைவிட்டுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரும் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.