November 21, 2019
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் வரதராஜாபுரத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில் அதில் பங்கேற்க சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தலைமையில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும்,
சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ, தனக்கு தகவல் சொல்லப்படாமல் அரசு விழா தனது தொகுதியில் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன், குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ளவதற்காக வந்தார். குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்த திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக்கை காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் கூறுகையில்,
கோவை மாவட்ட நிர்வாகம் அரசு விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கி இருக்கின்றேன், ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
உள்ளாட்சி துறை அமைச்சர் கடந்த 8 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி துறை அமைச்சருக்கு திறமையில்லை.உள்ளாட்சி தேர்தல் வருகின்றது என்றவுடன் தற்போது குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துகின்றனர். தற்போது சட்டமன்ற உறுப்பினரான என்னை குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் துறையினர் அனுமதி மறுக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் அரசு விழாவினை அதிமுக விழாவை போல நடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்.மேலும்,தன்னை குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அனிமதிக்க வேண்டும் எனவும், அதுவரை இங்கிருந்து நகரப்போவதில்லை எனவும் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தெரிவித்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது அரசு விழா கிடையாது எனவும் அதனால் சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை சொல்வதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாக கூறி எம்.எல்.ஏ கார்த்திக் அங்கிருந்து சென்றார். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.