November 19, 2019 தண்டோரா குழு
மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல் துறையின் மனுவை நீதிபதி சக்திவேல் தள்ளுபடி செய்தார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 9 ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தீபக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி தடாகம் காவல் துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மாவோயிஸ்ட் தரப்பில் ஆஜரான மூத்த வழகறிஞர் பப்பா மோகன், மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்து பேசிய பின்னர்தான் பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதி சக்திவேல், வழகறிஞர் பாப்பா மோகன் மற்றும் குழுவினர் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி அளித்தார்.
நீதிபதி அளித்த உத்திரவு ஆணையுடன் அரசு மருத்துவமனைக்கு வழகறிஞர் குழுவினர் சென்றனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகமும், சிறை துறை அதிகாரிகளும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதிக்க அளிக்கவில்லை.இதனையடுத்து பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த வழகறிஞர். பப்பா மோகன் நீதிபதி சக்திவேலிடம் முறையிட்டார். இந்நிலையில் அரசு தரப்பில் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை காவல் துறையினர் திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர். காவல் துறையின் மனுவை நீதிபதி சக்திவேல் தள்ளுபடி செய்தார். இதனைதொடர்ந்து மாவோயிஸ்ட் தரப்பு வழகறிஞர் பப்பா மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை சந்திப்பது என்பது அடிப்படை உரிமை, மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் மருத்துவமனை நிர்வாகமும், சிறைதுறையும் அனுமதி மறுத்துள்ளது.இவர்கள் அனுமதி மறுத்ததை நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் அரசு தரப்பு மனுவை திரும்ப பெறுவதாக கூறியது. இதையடுத்து நீதிமன்றம் காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்தது. மாவோயிஸ்ட் தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தி இருக்கின்றது. மாவோயிஸ்ட் தீபக்கின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து இருக்கின்றது என்பதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்து இருக்கின்றோம். நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் சந்திக்க விடாமல் இருந்த அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர், சிறைதுறை அதிகாரி உட்பட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் மாற்றினர்.