November 16, 2019
கோவை ரத்தினபுரி பகுதியில் லாரி மோதி 2 பள்ளி மாணவிகள் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் காலையில் 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விதியை மீறி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்துக் கொண்டு வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி சிங்காநல்லூர் அருகே பள்ளி மாணவி மீது லாரி மோதியதில் மாணவியின் கால் உடைந்து மாணவி துடி துடித்த சோக சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் மீண்டும் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் விதியை மீறி வந்த டிப்பர் லாரி மோதி 2 பள்ளி மாணவிகள் பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த ராமனின் மகன் வெங்கடேஷ்.இவர் காலையில் இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களான காயத்ரி (9) மற்றும் கீர்த்தனா(7) ஆகியோரை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரியானது ரத்தினபுரி புதுப்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவிகள் 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வெங்கடேசனை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து பள்ளி மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் லாரியை ஓட்டி வந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.