November 15, 2019
தண்டோரா குழு
கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஒடிசி புத்தக கடை செயல்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 15ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், சாகித்ய விருது பெற்ற பிரபல எழுதாளர் ராமகிஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர்,
“அனைவரும் வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் புத்தகங்கள்தான் ஒரு மனிதனுக்கு அவனுடைய மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அடையாளம் காட்டுபவை. புத்தகம் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்ட வல்லவை. ஒரு மனிதனின் துயரத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்ட உருவானவர்களே எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்குத் புத்தக வாசிப்புத்திறனை வளர்த்துக்கொண்டு அனைவரும் ஏதாவது ஒரு புத்தகத்தையாவது வாங்கி படிக்க வேண்டும்.” என்றார்.
இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக பிரபல எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், நாஞ்சில்நாடன், கோபாலகிருஷ்ணன், சோம.வள்ளியப்பன், முகில் மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணியளவில் வாசகர்களை சந்திக்கின்றனர். இந்த கண்காட்சியில் தமிழ் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.