November 9, 2019 தண்டோரா குழு
இது நம் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பின் காலம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று குறிப்பிட்டனர். இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு,
வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறும்போதும்,
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிப்பதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காக்க வேண்டிய தருணம் இதுவாகும்” எனக் கூறியுள்ளார்.