October 26, 2019 தண்டோரா குழு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான். இதையடுத்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 17 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். மீட்புப் பணியின் போது, குழந்தை சுஜித் 26 அடியிலிருந்து 70 அடிக்கு விழுந்துவிட்டான். இதனால், குழந்தையை மீட்கும் பணி தாமதமாகி வருகிறது.
இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர். இதற்கிடையில், சிறுவன் சுஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujit #PrayforSuith என்ற ஹேஸ்டேக்கில் பொதுமக்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு என, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
“சுஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன.இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு,” எனப் பதிவிட்டுள்ளார்.