October 14, 2019
தண்டோரா குழு
இந்தியாவை சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு 2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உலக அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. நோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே இயற்பியல், வேதியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒவ்வொரு துறையாக அவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற 2வது பெண் என்ற பெருமையை எஸ்தர் பெற்றார். இதில், அபிஜித் மற்றும் எஸ்தர் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.