October 12, 2019
தண்டோரா குழு
பல்வேறு விதமான சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த கோவையை சேர்ந்த பி.கே.குமார் கோவை நகரின் சைக்கிள் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்ப்யர் குமார் என அழைக்கப்படும் பி.கே. குமார் பிசியோதெரபி மற்றும் மருத்துவமனை மேலாண்மை முடித்து கோவை முத்தூஸ் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக சைக்கிள் பயிற்சி செய்து வரும் இவர்,பல்வேறு விதமான சைக்கிள்களில் சவாரி செய்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
1800களில் பிரபலமான பென்னி ஃபார்த்திங் எனப்படும் முன்னே பெரிய சக்கரங்களும் பின்னால் சிறிய சக்கரங்களை கொண்ட சைக்கிளை அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்.. அதேபோல பேக்வார்டு ப்ரைன் சைக்கிள் எனப்படும் மூளைத்திறனை திருப்பி சிந்தித்து செயல்படுத்தி ஓட்டக்கூடிய சைக்கிளில் பல் கிலோமீட்டர் பயணம் செய்து சாதனை படைத்தவர். இந்நிலையில் சைக்கிள் மற்றும் பல்வேறு துறைகளில் இவர் செய்த சாதனைகளை கவுரபடுத்தும் விதமாக கோவை நகரின் சைக்கிள் மேயராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த BYCS இந்த கவுரவத்தை இவருக்கு அளித்துள்ளது.
இது குறித்து அவர் நம்மிடம் பேசுகையில்,
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் தாம் இந்த பணியை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் சைக்கிள் ஓட்டும் பயன்பாட்டை பொது மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த போவதாக கூறிய அவர்,சைக்கிள் பயன்பாட்டை பொது மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் பசுமை போக்குவரத்து மற்றும் மனம் மற்றும் உடல் ரீதியையும் புத்துணர்வாக வைத்து ஆரோக்கியமாக வழி செய்வதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்தி வலுவான சமூகங்களை உருவாக்குகிறது என்றார்.