October 9, 2019
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக அதிகளவு செம்மண் எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இந்த விதிமீறல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் தடாகம் செங்கல் சூளைகளில் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகளவு மண் வெட்டிஎடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர் புகார்கள் செல்லவே மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தடாகத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றினை கண்டறியும் கருவிகளையும், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர் . மொத்தம் 9 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்தக் கருவிகள் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மற்றும் சுற்றுசூழல் மாசடைவது குறித்து கண்காணிப்படுகிறது. கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் , உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் முகாமிட்டு காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணியானது இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.