October 1, 2019
தண்டோரா குழு
தமிழை வைத்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் லாபம் பெற்று வருவதாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை பாதையாத்திரை நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வைசியாள் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் இப்பாதயாத்திரை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி சார்ந்த எந்த அடையாளமும் பின்பற்றப்பட மாட்டாது என்று கூறிய அவர், தேசியக்கொடி மட்டுமே பாதையாத்திரை நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு பாதயாத்திரை செல்லும்போது இரு மடங்காக மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா இருப்பதாக கூறிய அவர், தமிழை வைத்து திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அரசியல் லாபம் பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார். அமித்ஷாவின் கருத்துக்கு எதிரான போராட்ட அறிவிப்பை பொய்க் காரணங்களைக் கூறி வாபஸ் பெற்றதே திமுகவின் தகிடுதித்தங்களில் ஒன்றுதான் எனவும் அவர் விமர்சித்தார். பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது மிகுந்த அன்பும், காதலும் கொண்டவர் என புகழாரம் சூட்டிய எஸ்.ஆர் சேகர், உலக அளவில் தமிழ் மொழியின் பெருமையை பரப்புவதில் பிரதமர் மோடி அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்று கூறினார். இதற்காக அனைத்து தமிழ் மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பு பொதுச்செயலாளர் ரமேஷ், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.