September 19, 2019
தண்டோரா குழு
கோவை இரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய நாடகம் பயணிகளை வெகுவாக கவர்ந்தது
கோவை ரயில் நிலைய வளாகத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து தூய்மை இந்தியா இயக்கம் – தூய்மை விழிப்புணர்வு முகாம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு ரயில்வே முதன்மை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்றனர். மேலும் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா (சுவச் பாரத்) நன்மை குறித்து ரயில் நிலையத்தில் கூடியுள்ள பயணிகள் முன்பு மைம் நாடகம் மூலமாகவும், நடனம், மற்றும் காகித பிரச்சாரங்கள் மூலமாகவும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
அதன்பின்னர் இரயில் நிலையம் ப்ளாட்பார்மில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுச்சென்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைத்தனர், மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும், குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும், உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது, கழிப்பிடங்களை சுத்தமாக பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்ள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் மாணவ-மாணவிகள் முகத்தில் வண்ணங்களை பூசிக்கொண்டு, ஒருமித்த பாவணைகளுடன் நடித்த நாடகம் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.