September 13, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூரில், பிறந்த ஆண் குழந்தை 7500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான அருள்செல்விக்கு திருமணம் ஆகாத நிலையில்,கடந்த ஆறாம் தேதி அன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார்.இதையடுத்து, அவரது உடலை அவருடைய அக்கா கணவரான ஆனந்தராஜ் சொந்த ஊரான நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் – செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராஜன் செல்வி தம்பதி,அந்தக் குழந்தையை,அவினாசிப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலை என்ற உறவினரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர்.இதற்கிடையில்,குழந்தை விற்பனை குறித்து தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உமா தேவி,ஆலோசகர் ஜோசப் ரகுமான் கென்னடி உள்ளிட்டோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் குழந்தையை வாங்கிய செல்வியுடன் விசாரணை நடத்தினர்.அருள்செல்வியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் தான் குழந்தையை விற்றதாக ஆனந்தராஜ் வாக்குமுலம் அளித்துள்ளார்.காவல்துறை விசாரணையில் அருள்செல்வி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குழந்தையின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.