August 20, 2019 தண்டோரா குழு
கோவையில் ஒற்றை காட்டு யானை 2 நாட்களில் 2 பேரை மிதித்துக் கொன்றது.இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட வனம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்துவருகின்றது. இவைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களையும் மனித உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் கணபதி கார்டன் என்ற வெட்ட வெளி இடத்தில் இரவு 8.30 மணி அளவில் விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவர் மது அருந்தி கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒரு ஆண் காட்டு யானை அவர்களை விரட்டியுள்ளது. அப்போது அந்த யானை பிரேம் கார்த்தி என்பவரை மிதித்து கொன்றது. விக்னேஷ் என்பவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். உடனடியாக அவரது உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையுனர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதே காட்டு யானை நேற்று நள்ளிரவில் துடியலூரை அடுத்த பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை தாக்கி தூக்கி வீசி கொன்றது. கடந்த 2 நாட்களில் 2 பேரை காட்டு யானை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வனத்துறையுனர் அப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டுயானை அடர்ந்த வனப்பகுதிற்குள் விரட்டி அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.ஏற்கனவே இப்பகுதிகளில் இருந்த விநாயகன் மற்றும் சின்னதம்பி ஆகிய காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து முதுமலை மற்றும் டாப்சிலிப் வனப்பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.