August 2, 2019
தண்டோரா குழு
நெய்வேலியில் திருட வந்த கடையில் பணம் இல்லாததால் கடிதம் எழுதி வைத்த திருடனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ஜெயராஜ் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலையில் வந்து பார்த்த போது கடையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே திருடன் கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த அரிசி மூட்டை, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்தும், பொருட்களை வாரி இறைத்தும் சென்றுள்ளார். இதுமட்டுமின்றி, கடை உரிமையாளரை கேள்வி கேட்கும் விதமாக அந்தத் திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். அதில் ” உயிரை பணம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, இது குறித்து ஜெயராஜ் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.