July 31, 2019
தண்டோரா குழு
கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திவிக, திக, தபெதிக, சிபிஎம், விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,நிர்மல் குமாரை தனிமை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார்.மேலும் கருத்தூரிமையை பறிக்கும் வகையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதிமுக அரசு அண்ணா கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.