July 31, 2019
தண்டோரா குழு
கோவையில் நூறாண்டுகளுக்கு மேல் மக்களின் மனக்கவலை போக்கிய ஆலயத்தை அகற்ற வேண்டுமென அரசு அதிகாரிகள் துடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில். மைசூரை ஆண்ட மூன்றாம் கிருஷ்ணராஜ தேவராயரால் 1876 ஆம் ஆண்டு இக்கோவில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் கோவில் அமைந்திருக்கிற பகுதியை ஒட்டி பாலம் அமைக்கப்படவுள்ளதால் கோவிலை அகற்ற வேண்டும் என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கரிவரதராஜ பெருமாள் கோயிலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக அங்கிருக்கும் இக்கோவிலை அகற்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாலம் அமைக்கவும் அரசாங்க நடவடிக்கைக்கும் தாங்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை எனக்கூறும் இக்கோவிலை நிர்வகித்து வரும் குடும்பத்தினர், பாரம்பரியமான இக்கோவிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் போதும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மிகப்பெரிய தொன்மை வாய்ந்தது எனக்கூறும் அவர்கள் இதனை உணர்ந்து அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலைத் துறையினரும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும் இக்கோவிலை மேம்படுத்த அறநிலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.