July 16, 2019 தண்டோரா குழு
இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று தபால்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெற்றன.
இதற்கிடையில், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வரை பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது சிரமம். எனவே, இந்த தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆங்கிலம், இந்தியில் தேர்வுகள் நடைபெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.
இந்நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 14) நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.