July 9, 2019
தண்டோரா குழு
கீரணத்தம் பகுதியில் விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் நிதியுதவி வழங்கினார்.
கோவை மாவட்டம் கீரணநத்தம் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சுப்பிரமணியம் எனபவருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சி கூட கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ராஜப்பன், வேடியப்பன் உள்ளிட்ட ஆறு பேர் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கியதில் ராஜப்பன்(38), வேடியப்பன் (29), வேடியப்பன் (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கோவில்பாளையம் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை அரசு மாளிகையில் சந்திந்து ஆறுதல் கூறிய தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மேணி சம்பவம் நடந்த இடத்தையும், பார்வையிட்டார்.
இதனையடுத்து அவர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது விஷ வாயு தாக்கி இறந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து 30 லட்ச ரூபாயை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார். முதல் கட்டமாக ராஜப்பன் மனைவி சுந்தரியிடம் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார். விஷ வாயு தாக்கி இறந்த இரு வேடியப்பன்களின் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் கிடைத்தவுடன் , ஒரிரு நாளில் நிதியுதவி வழங்க இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பைச்சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.