July 4, 2019
தண்டோரா குழு
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.
கருணாநிதி இருக்கும் வரை உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவில் எந்தப் முக்கியப் பொறுப்பிலும் இருந்தது இல்லை. கட்சி தொடர்பான பணிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பெரிதும் ஆர்வம் காட்டியதில்லை. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எதிர்கொண்ட மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சாரகராக உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தார்.அதற்கு முன்னரும், கிராம சபைக் கூட்டத்துக்கு சென்று நேரடியாக மக்களைச் சந்தித்துவந்தார்.இந்த மக்களவைத் தேர்தலின்போது, உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்தநிலையில், தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகம் முழுவதுமுள்ள தி.மு.க தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றன.தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவிவகித்தார். தி.மு.கவைப் பொறுத்தவரை, இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது மிகவும் அதிகாரம் வாய்ந்த பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.