June 29, 2019
தண்டோரா குழு
கேரள மாநிலம் பாலக்காடு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அதனை காண கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர் ஆம்னி வேன் ஒன்றில் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் வேனை ஓட்டிய நிலையில் தமிழக எல்லையான வாளையாறை கடந்து சென்றபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர் ஷாஜஹான் மற்றும் வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம் குழந்தைகளான ஆலுவா ஷூஃபியா,ஷெரின்,ரியான் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணித்த 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தகவலறிந்து விரைந்து சென்ற வாளையாறு காவல்நிலைய போலீசார் ஐந்து பேரின் சடலங்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.