June 3, 2019
தண்டோரா குழு
போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குதிரை சவாரி கண்காட்சியில் பங்கேற்ற கோவை குதிரை சவாரி பயிற்சி மையத்தை சேர்ந்த நான்கு பேர் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஈகுயின் டிரீம்ஸ் எனும் குதிரை சவாரி பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த மையம் சார்பில் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குதிரைப் பந்தயம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக கோவையைச் சேர்ந்த மாணவி உள்ளிட்ட நான்கு இளம் வீரர்கள் அனுப்பப்பட்டனர். போர்ச்சுக்கல் ,ஸ்பெயின், இங்கிலாந்து, அயர்லாந்து, சுவீடன் ,நார்வே, சுவிட்சர்லாந்து ,பிரேசில் மற்றும் இந்தியா என ஒன்பது நாடுகள் சார்பில் 320 குதிரைகள் கண்காட்சியில் பங்கேற்று இருந்த சூழலில் குதிரை சவாரி போட்டியும் நடத்தப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த குதிரை சவாரி வீரர்கள் சரவணன் கந்தசாமி ,சபரி விகாஸ் ,அகில் மற்றும் அவந்திகா உள்ளிட்ட 4 பேர் பங்கேற்றனர். இதில் குதிரைகளுக்கான தடைதாண்டும் போட்டியின் 110 சென்டி மீட்டர் பிரிவில் சரவணன் கந்தசாமி மூன்றாம் பரிசையும், 80 சென்டி மீட்டர் பிரிவில் அகில் மூன்றாம் பரிசையும், 100 சென்டி மீட்டர் பிரிவில் ரித்திக் நான்காவது இடத்தையும் அதே 100 சென்டி மீட்டர் பிரிவில் அவந்திகா 6-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
சர்வதேச கண்காட்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 4 பேரும் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து பரிசுகளையும் பெற்று வந்ததை அடுத்து அவர்களுக்கான பாராட்டு விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள ஈகுயின் ட்ரீம்ஸ் குதிரை சவாரி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
அப்போது கேக் வெட்டி அம்மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் வெற்றியைக் கொண்டாடினர். முன்னதாக இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெற்றியாளர்கள், போர்ச்சுக்கலில் நடைபெற்ற குதிரைப் பந்தய போட்டியில் பங்கேற்றது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது எனவும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை விட அங்கு நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாறுதல்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.