June 3, 2019
தண்டோரா குழு
மின்சாரம் தாக்கி இறந்த கணவரின் இழப்பீடு தொகையை பெற்று தரகோரி கண்ணீர் மல்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருச்சி அருகே மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் வடவள்ளி
அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் ரகுபதி,ரேவதி, தமிழ்செல்வி ஆகியோர் வடவள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் பெரியசாமி ஒண்டிப்புதூர் அருகே உள்ள கட்டுமான பணி வேலைக்கு கொத்தனார் பழனிச்சாமி என்பவர் மூலம் வேலைக்கு சென்றுள்ளார். கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி கடப்பாரையால் மண்ணைத் தோண்டிய போது நிலத்தின் அடியில் பதிக்கபட்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.இதில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளார். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் மாணிக்கவாசகம் இழப்பீட்டுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியதாகவும் ஆனால் அதனை அவரது வழக்கறிஞர் மூலம் காசோலையாக கொடுத்துவிட்டு காசோலையின் நகலை தன்னிடம் வழங்கியதாக லட்சுமி கூறியுள்ளார்.
இந்நிலையில், வாழ வழியின்றி தவிப்பதாகவும் தனக்கும் தன் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்ய இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் லட்சுமி மனு அளித்தார்.