December 14, 2018
தண்டோரா குழு
திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளா பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் தடைகளை நீக்கக்கோரி வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து , இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவிற்கு செல்பவர்கள் யாரும் வராததால் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வரராததால் வெறிச்சோடி காணப்பட்டது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.