December 14, 2018
தண்டோரா குழு
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. 2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி காங்கிரஸ், சிறப்புப் புவனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான். ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை , ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
மேலும்,ரபேல் போர்விமானம் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடியாகத் உத்தரவு பிறப்பித்தது.